லண்டனில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி..

 
 லண்டனில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி..

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு லண்டனில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.  லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்  உடல்நலக்குறைவால்  கடந்த 8-ந் தேதி காலமானார்.  96 வயதான அவருக்கு  ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.  அவரது இறுதி சடங்கு வருகிற 19-ந் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.  அவரது இறுதிச் சடங்கில்  உலக தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார்.   இதற்கிடையே  ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணி எலிசபெத்தின் உடலுக்கு  அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Queen Elizabeth

அதனைத்தொடர்ந்து  விமானப்படை விமானம் மூலம் ராணியின் உடல்  நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்ட  பின்னர்  உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச்  செல்லப்பட்டது. அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும்  அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து,  நேற்று பிற்பகலில்  ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.  ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது.  

ராணி எலிசபெத்

இந்த இறுதி ஊர்வலத்தில்   மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி,  மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்டு ஆகியோரும் பங்கேற்றனர். இதில் மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்டு மற்றும் வில்லியம் ஆகியோர் ராணுவ உடைகளை அணிந்திருந்தனர்.  ஆனால்  அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹாரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் இருந்தனர். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.    

 லண்டனில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி..

பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல்  பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  கடந்த திங்கள் கிழமை முதலே  ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான  பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.  ஆகையால் ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19-ந் தேதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்பொருட்டு  இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்து   லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வண்ணம் இருக்கின்றனர்.