எந்த நாடும் தப்ப முடியாது.. உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் : ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..

 
Antonio Guterres  - ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்


கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம்  பேரழிவை சந்திக்கும் என்றும்,  அதன் பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில்   நியூயார்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று, ஆகியவற்றால் முன் எப்போதும்  இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.  இதனால்  கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

உணவுத் தட்டுப்பாடு

உக்ரைன் மீதான ரஷ்ய போரால் அந்த  நிலைமை மேலும்  மோசமடைந்துள்ளது.   ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா நாடுகளில்   வேளாண் பணிகளுக்கு தேவையான உரம், எரிசக்தி  ஆகியவற்றின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.  இதனால் அறுவடை பாதிக்கப்பட்டு, இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.  

2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் மேலும் மோசமடையும்,  உணவு கிடைக்காமல் ,   உணவு பொருட்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும்.  இது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும்.  இதனால் ஏற்படும் பொருளாதார பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது.  இந்நிலையில்,  உணவு  தட்டுப்பாட்டை சமாளிக்க ஐநா. அமைப்பின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Antonio Guterres - ஐ.நா பொதுச்செயலாளர்

 வேளாண் பணிகள் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும். எழை நாடுகள் மீண்டுவர கடன் நிவாரணம் அளிக்கலாம்.  உலக  உணவு சந்தையை பலப்படுத்த தனியார் துறையினரும் உதவி செய்ய வேண்டும்.” என்று அண்டோனியோ குட்டரஸ்  தெரிவித்தார்.