பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு..
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளும் இன்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ள, எதிர்க்கட்சிகள் , இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று ( ஏப்ரல் 3 ஆம் தேதி) ஒட்டெடுப்பு நடத்தப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக MQM கட்சி திடீரென அறிவித்தது. அத்துடன் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தது. இதன் காரணமாக இம்ரான்கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே பெரும்பான்மையை இழந்துவிட்டது.
ஆட்சியை தக்கவைக்க மொத்தம் உள்ள 342 இடங்களில் 172 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், MQM கட்சியின் இந்த அறிவிப்பால் இம்ரான்கானுக்கு 162 எம்.பிக்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதனால் பெருமான்மையை இழந்துள்ள இம்ரான்கான் அரசு ஆட்சியை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. அதேநேரம் எம்.கியூ.எம் கட்சியின் ஆதரவால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக கூடியிருக்கிறது.
இருந்தபோதிலும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இன்ரான் கான், கடைசி பந்து வரை ஆடுவேன் என்று கூறினார். அதாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என்றும், இதில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.