கொரோனா பரவலால் வடகொரியா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது - அதிபர் கிம் ஜாங் உன்
கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவானது. இதனை தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாடு முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்தார். குறுகிய காலத்திற்குள் கொரோனாவை ஒழிக்கவே, நாட்டின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தக் கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள கிம் ஜாங் உன், கொரோனாவை நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என்று கூறியிருந்தார். ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து வடகொரியாவில் 1,87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் கிம் ஜான் உன், கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட உத்தரவிட்டுள்ளார். மேலும் நாட்டின் எல்லைகளிலும் வான்வழி மற்றும் கடல்வழி முனையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.