உக்ரைன் தொலைக்காட்சி டவர் மீது ஏவுகணை தாக்குதல்.. 9 பேர் உயிரிழப்பு..
உக்ரைலில் தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியிருக்கிறது
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சற்றும் தொய்வின்றி 20வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உக்ரைன் மக்களுக்கு காலைப்பொழுதே ரஷ்யாவின் ராட்சத குண்டு மழை பொழியும் சத்தத்தைக் கேட்டுதான் விடிகிறது என்று சொல்லுகிற அளவுக்கு தாக்குதல் அங்கு தீவிரமாகியிருக்கிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏவுகனனைகள் மூலம் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி உக்ரைனை சின்னாபின்னமாக்கியிருக்கிறது ரஷ்ய படைகள்.
பல நகரங்களை முழுமையாக கைப்பற்றிவிட்ட ரஷ்ய படைகள், சிறிய நகரங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் 2,100 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்திருக்கும் தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 9 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆண்டோபில் கிராமத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது அதிகாலை நேரத்தில் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் , அதில் 9 உயிரிழந்ததாகவும் அந்த பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்திருக்கிறார். மேலும் இடிபாடுகளிடையில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கூறியுள்ளார். அதோடு ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 100 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது. எனினும் இந்த தகவலை ரஷ்யா உறுதி செய்யவில்லை.