உக்ரைனில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் மீட்டு வரும் ரஷ்ய படையினர்
ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலால் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இருநாட்டு அதிபர்களுடனும் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை ரஷ்யா வழியாக வெளியேற அனுமதிக்கும்படியும் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களையும், வெளிநாட்டவரையும் மீட்டு ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்ல 130 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் பேருந்துகள் கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டவரை ரஷ்யாவின் எல்லைக்கு அழைத்துவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு அழைத்து வரப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அவர்கள் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.