மின் நிலையங்களை குறி வைத்து தாக்கும் ரஷ்யா.. இருள் சூழ்ந்த உக்ரைன் நகரங்கள்..
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய இருந்த நிலையில் அதனை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்ய கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில் தற்போது போர் தொடங்கி 296 நாட்கள் கடந்துள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருகுலைந்து போயுள்ளன. கடந்த 2 மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தை பற்றி இரு நாடுகளும் பேசி வந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தலைநகர் கீவ்வை கைப்பற்ற 2 லட்சம் வீரர்களை ரஷ்யா தயார் செய்து வருவதாகவும், புத்தாண்டு தினத்தை ஓட்டி தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உக்ரைன் ராணுவ தளபதி ஜென்ரல் மெலனின் செலன்சி அண்மையில் எச்சரித்திருந்தார்.
இதனால் பரபரப்பு நிலவி வந்த சூழலில் தலைநகர் மீது ரஷ்ய ராணுவம் நேற்றிரவு சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கிவ் நகரை சுற்றியுள்ள 3 மாவட்டங்களின் மீது 4 இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஈரான் வகை பொருள்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கீவ் நகர மேயர் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் விடாமல் ஒலிக்கும் சைரன்களுடன், போர் அச்சத்தில் சிக்கித் தவிக்கும் கீவ் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது. அங்கு தற்போது கடும் குளிர் நிலவிவரும் நிலையில், அந்நாட்டில் எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, உக்ரைனின் மின் நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்பாக உக்ரைன் போரில் முக்கிய சம்பவங்கள் அரங்கேறலாம் என்று போர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.