இலங்கையில் துப்பாக்கிச் சூடு..தொடரும் பதற்றம்.. - போலீஸாருக்கு அதிரடி உத்தரவு போட்ட மனித உரிமைகள் ஆணையம்
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என வெகுண்டெழுந்த மக்கள் அதிபர் கோத்தபய உள்பட ராஜபக்சே சகோதரர்கள் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் , கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து போர்க்கொடி தூக்கியுள்ளன. இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர, அவரது அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அனைத்துக் கட்சி ஆட்சிமுறைக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை.
அதேநேரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் கூட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் கொழும்புவையும், முக்கிய நகரமான கண்டியை இணைக்கும் ரம்புக்கனா என்கிற இடத்திலும் 8 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். சாலைகளில் டயர்களையும் தீயிட்டுக் கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Video footage shows a group of protesters putting out a fire at the Rambukkana fuel station pic.twitter.com/UANVRARzno
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 19, 2022
இந்நிலையில், எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரியை தீ வைத்து எரிக்க முயன்றதாகவும், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூற்ப்படுகிறது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார், கண்ணீர் புகைக்குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் 15க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 8 காவலர்களும் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை நிகழ்வால், ரம்புக்கனா காவல்நிலைய பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கின்றனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டத்தை முறியடிக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் , பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளது.