சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா...தொழிற்சாலையில் இருந்து தப்பியோடும் ஊழியர்கள்

 
China

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊரடங்கிற்கு பயந்து தொழிற்சாலையில் இருந்து தப்பியோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. வைரஸ் பரவலின் தொடக்கத்தில் பொதுமுடக்கத்தை அறிவித்த சீனா இதனை சிறப்பாக கையாண்டது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கினர்.