ட்ரம்பின் பேஸ்புக்,இன்ஸ்டகிராம் கணக்குகள் மீதான தடை நீக்கம்..

 
 ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்பின் பேஸ்புக் - இன்ஸ்டகிராம் கணக்குகள் மீதான தடை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.  

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தோல்வியை ஏற்க மறுத்தார்.  இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்தார்.  இதனால் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம்  டிரம்பின் ஆதரவாளர்கள்  பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன.

facebook

இதற்கிடையே கடந்த ஆண்டு எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை நீக்கப்பட்டது. இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் தெரிவித்ததாவது, “வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம். குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம்” என்றார். இதன் மூலம்  2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.