ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கம்.. வழங்கம்போல வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அந்த அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது.
நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் அரசு முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. 6 வாரங்களுக்கு மேலாக இரு நாட்டுக்கும் இடையே போர் நீடித்து வரும் சுழலில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதால், ரஷ்ய படைகள் பல்வேறு நகரங்களில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஆனால் கடைசி நேரத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அந்த நகரங்கள் உருகுலைந்துபோயுள்ளன.
குறிப்பாக கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கை, கால்களை கட்டி துப்பாக்கியால் சுட்டும், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டு உடல்கள் சாலைகளிலும், குப்பைத்தொட்டிகளிலும், பதுங்கு குழிகளிலும் வீசப்பட்டிருந்தன. தேவாலயம் ஒன்றின் அருகில் இருந்த பள்ளத்தில் 280 உடல்களும், பைன் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இனப்படுகொலை செய்துவருகிறது, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் ஐ.நா சபையை கலைந்து விடுங்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தார். இதனிடையே ஐநா பொதுச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கான வாக்கெடுப்பில் 93 நாடுகள் ஆதரவளித்தன. இதனையடுத்து ஐ.நா மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டது. வழக்கம்போல இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதேபோல் 57 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தன.