உக்ரைனுக்கு துணை நிற்போம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி..
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய இருந்த நிலையில் அதனை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்ய கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில் தற்போது போர் தொடங்கி 300 நாட்களுக்கும் மேல் கடந்துவிட்டது. ஆனாலும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருகுலைந்து போயுள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவியும், ராணுவ தளவாடங்களையும் அனுப்பி பக்கபலமாக இருந்து வருகின்றன. இதனால் ரஷ்யாவுக்கு நிகராக உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று, போலந்தின் செமிசோ நகருக்கு ரயிலில் பயணித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து போரின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பிறகு ஜெலன்ஸ்கி இப்போது தான் முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளார். இந்த சந்திப்பை ஒட்டி, உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்குகிறது.
இதில் பேரிட்லாட் ஏவுகணைகளுடன் கூடிய பல அடுக்கு வான்வழி தாக்குதல் எதிர்ப்பு கருவிகள் உக்ரைன் பெற்றுக்கொண்டது. இந்த சந்திப்பினை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்துவிட மாட்டோம் என்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக நேட்டோ படைகள் எப்போதும் துணை நிற்கும் என்றும் உறுதிபடக் கூறினார். தெரிவித்தார். மேலும், இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்புகிறோம் என்றும், கண்ணியமான முறையில் புதின் நடந்து கொண்டால் இது சாத்தியமாகும் என்றும் ஜோ பைடன் கூறினார்.