உக்ரைன் விவகாரம் - போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர்

 
joe biden

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், இந்த விகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு செல்லவுள்ளார். 

நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்தது, மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு உள்ளிட்ட உக்ரைனின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து 26-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் கொடூர தாக்குதலால் குழந்தைகள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிருக்கு பயந்து உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். போரை நிறுத்த கோரியும் ரஷ்யாவிற்கு எதிராகவும் உக்ரைன் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அந்த தீர்மானம் போதிய ஆதரவு கிடைக்காமல் தோல்வியில் முடிந்ததது. இதேபோல் ரஷ்யா ராணுவம் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியது. இதனையடுத்து தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ரஷ்யா அந்த தீர்பை பொருட்படுத்தவில்லை. போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் கூட அதில் உடன்பாடு எட்டப்படவில்லை .

russia war

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக வரும் வெள்ளியன்று போலந்துக்குச் செல்ல இருக்கிறார்.  ரஷ்ய அதிபருடன் நேரடிப் பேச்சு நடத்துவது தான் போரை நிறுத்துவதற்கான ஒரே வழி என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்துக்குச் செல்ல இருப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போரிட்டுவரும் ரஷ்யாவுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்துக் கூட்டணி நாடுகளுடன் விவாதிப்பதற்காக ஜோ பைடன் செல்வதாகத் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.