தைவானுக்கு அதிநவீன போர் தளவாடங்களை விற்கும் அமெரிக்கா..
அமெரிக்கா , தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக அந்நாடு குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி , சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றது அந்நாட்டுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து தைவானை மிரட்டும் விதத்தில் , அந்நாட்டு பொருட்களுக்கு தடை விதித்த் சீனா, தொடர்ந்து அந்நாட்டு எல்லையில் தீவிர போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பெரும் பதற்றம் உருவானது. அத்துடன் ட்ரோன் விமானங்கள் மூலன் கண்காணிக்கும் பணியையும் சீனா மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் சீனாவில் இருந்து எல்லை தாண்டி நுழைந்த டிரோன் விமானத்தை, துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததாக தைவான் ராணுவம் தெரிவித்திருந்தது.
சீனாவை எதிர்கொள்ள தயாராகும் விதத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்க தைவான் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறது. அதன்படி 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா விற்பதாக அறிவித்திருக்கிறது.
போர் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய 60 ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் 100 ஏவுகணைகள் போன்றவற்றை தைவான் வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும் அதிநவீன ஏவுகணை , ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை மற்றும் விரிவாக்க அமைப்பையும் தைவானுக்கு, அமெரிக்கா விற்பனை செய்ய இருக்கிறது.