58 நாடுகளில் 6000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை - WHO
உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது. குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.
இதுவரை பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை பரவல் அதிகரிப்பு தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பா நாடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.