55 கோடியை நெருங்கும் உலக அளவிலான கொரோனா பாதிப்பு

 
world corona

உலக அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 கோடியை நெருங்கி வரும் நிலையில் , கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது. 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.  கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. வைரஸ் தொற்று பரவ தொடங்கிய போது பெரும் சவாலை சந்தித்த சீனா, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் குறைவான அளவிலேயே பாதிப்பு பதிவாகியது. கொரோனாவால் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. 

south korea corona

இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை உலக அளவில் 54 கோடியே 89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 52.38 கோடி பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இதுவரை உலக அளவில்  63.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரான் வைரஸ் உருமாற்றம் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 17,073  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.