மூன்றாம் உலகப்போர்? திடீர் குண்டு வீச்சினால் எழும் அச்சம்
மூன்றாம் உலகப் போர் தொடங்குகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த திடீர் குண்டு வீச்சு சம்பவம்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வைத்திருப்பதால் போர் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனில் ஒரு பகுதியில் திடீர் குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைனின் எல்லையோர மாகாணம் டான்பஸ். இதன் ஒருபகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டானிட்சியா, லுகன்சா நகரில் நகரில் இருக்கும் ஒரு கிராமத்தில் திடீரென்று குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியின் கட்டிடம் முழுவதுமாக சேதம் அடைந்து இருக்கிறது. ஆசிரியர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து பள்ளி ஊழியர் நடாலியா என்பவர், குண்டு வெடித்த வேகத்தில் பள்ளியின் ஜன்னல்கள் சிதறின. நான் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டேன். எங்குபார்த்தாலும் ஒரே புகை மூட்டமாக இருந்ததால் என்ன நடந்தது என்பது முதலில் தெரியவில்லை. தாக்குதலில் பள்ளி ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி மீது ரஷ்ய படைகள்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. ஆனால் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
ரஷ்யா - உக்ரைன் மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில், உக்ரைன், ரஷ்யா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் திடீர் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சர்வதேச அரசியலில் மேலும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.