அமெரிக்காவில் அதிர்ச்சி... 2 டோஸ் போட்டவரை அட்டாக் செய்த ஒமைக்ரான்!
உலக சுகாதார அமைப்பு கொடுத்த தகவலின்படி புதிதாக உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளில் பரவியுள்ளது. அதில் உலக வல்லரசு நாடான அமெரிக்காவும் ஒன்று. ஆம் அமெரிக்காவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் கொரோனா வைரஸை கண்டுபிடித்த உடனே, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிடையே பயண கட்டுப்பாட்டை அதிகரித்தது அமெரிக்கா. ஏனென்றால் அங்கு டெல்டா கொரோனாவின் ஆட்டமே அடங்கவில்லை.
முக்கிய நகரமான நியூநார்க்கை உலுக்கி எடுத்து வருகிறது டெல்டா கொரோனா. இதனால் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவையை ரத்து செய்தது. அமெரிக்காவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த மாதம் 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு வந்தவர். அவருக்கு ஒரு வாரத்துக்குப் பின் நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோனையில் 29ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அந்த நபர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றபோதிலும் அவருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரானை கவலையளிக்கக் கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்கும் என்பதால் சுகாதார கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் எனவும் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரானால் யாரும் பாதிக்கப்படவில்லை. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை மட்டும் அதிகரித்துள்ளது.