"தடுப்பூசி போடலேனா ரூ.3 லட்சம் அபராதம்" - அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பா கண்டத்திலுள்ள பெரும்பாலான நாடுகளிலும் கொரோனா புயல் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரியா நாட்டில்தான் மிக அதிகளவில் தொற்று பரவல் விகிதம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐரோப்பியாவில் முதல் நாடாக ஆஸ்திரியா முழு ஊரடங்கை பிறப்பித்தது.
இந்த ஊரடங்கால் தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தடுப்பூசி செலுத்தியவர்கள் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்கேயும் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் அனுமதி உண்டு. ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வேலை, அத்தியாவசிய பொருட்களை வாங்க, மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல முடியும்.
இவை தவிர தியேட்டர், கிளப், சுற்றுலா தளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதி கிடையாது. இதனை மீறி தடுப்பூசி செலுத்தாமல் யார் சென்றாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்தால் அந்த தியேட்டர்கள், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அரசு கூறியுள்ளது. தற்போது ஒட்டுமொத்த மக்களையும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தியுள்ளது. இவ்வாறு கட்டாயப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியா தான்.
அடுத்தாண்டு பிப்ரவரி 1ஆம் வரை வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். செலுத்தாவிட்டால் சிறை தண்டனை என அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் 66% பேர் மட்டுமே முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒரு டோஸ் கூட செலுத்தாமல் ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மூலமாகவே கொரோனாவும் அதிகளவில் பரவி வருகிறது. அதிகளவில் உயிரிழப்பவர்களும் அவர்கள்தான். ஆகவே தான் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.