பயங்கரம்... சந்தையில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 43 பேர் கொடூர கொலை - நடந்தது என்ன?
நைஜீரிய நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.17) அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் 43 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பது தொடர்கதையாகியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கக் கூடிய பண்டிட்ஸ் எனப்படும் கொள்ளைக்காரர்கள் தான் இம்மாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல போகோ ஹராம் என்ற பயங்கரவாத குழுக்களும் தனி இஸ்லாமிய நாடு கோரி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தற்போதைய சம்பவம் நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சோகோட்டோவில் நிகழ்ந்திருக்கிறது. சோகோட்டாவிலுள்ள கோரோன்யா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். வாரச்சந்தை என்பதால் அன்றைய நாள் கூட்டம் அலைமோதும். வியாபாரிகளும் மக்களும் பிஸியாக இருப்பார்கள். அந்தளவிற்கு கூட்டம் இருக்கும். அவ்வாறு வழக்கம் போல கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தொடங்கியுள்ளது. அப்போது கூட்டத்துக்குள் நுழைந்த சுமார் 200 நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியிருக்கிறது.
செய்வதறியாது திகைத்த மக்களில் பலர் அவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஒருசிலரே சுதாரித்துக்கொண்டு படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 43 மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மாகாண கவர்னர் அமினு வசிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். மர்ம கும்பலை தேடும் பணியில் போலீஸாரும் ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல கடந்த அக்டோபர் 8ஆம் தேதி மற்றொரு கிராமத்தில் புகுந்த பண்டிட்ஸ் கொள்ளைக்காரர்கள் 19 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.