நியூ இயரில் கொரோனாவின் "அடுத்த வில்லன்"... "புளோரோனா" தொற்று - 2022ம் அவ்ளோ தான் போலயே!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாகவே புத்தாண்டை முறையாக கொண்டாட முடியவில்லை. சரி இந்த முறையாவது மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் என உலக மக்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்தால், நவம்பரின் இறுதியில் சைலண்டாக என்ட்ரி கொடுத்தது ஒமைக்ரான். வந்தது கொஞ்சம் லேட்டாக பரவலாம் என்று பார்த்தால் ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் வட்டமடித்துவிட்டது. அதன் வேகம் மலைக்க வைக்கிறது. இருந்தாலும் அதன் வீரியம் குறைவு என்பது சற்று மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் விபரீதமே டெல்டாவும் அதனுடன் சேர்ந்துகொண்டு பரவி வருகிறது.
இதன் இரண்டின் குணங்களையும் உள்ளடக்கிய "டெல்மிக்ரான்" என்ற ஒரு உருமாற்றமடைந்த கொரோனா வேறு பரவுவதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் தினசரி 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்களை பார்த்து வருகிறது. பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கிறது. இந்தியாவில் மூன்று நாட்களிலேயே இரட்டிப்படைந்து விட்டது. ஆம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 22 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
இந்தியாவில் இதுவரை 1,400க்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிவேக பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் உலக நாடுகளும் புத்தாண்ட்டு கொண்டாட்டங்களைத் தடை செய்துவிட்டன. சரி புத்தாண்டை வாட்ஸ்அப், பேஸ்புக் என ஊடக வழியில் கொண்டாடி வருகின்றனர். அதற்கும் ஆப்படித்திருக்கிறது கொரோனா. அதனுடன் இன்புளுயன்சாவும் (குளிர் காய்ச்சல்) சேர்ந்து கொண்டுள்ளது. இது இரண்டும் இணைந்து இஸ்ரேலில் ஒரு பெண்ணை தாக்கியுள்ளது. அப்பெண்ணுக்கு இரண்டு தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த பகீர் செய்தி தான் உலகை உலுக்கியுள்ளது.
இதற்கு புளோரோனா (Florona) என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இரண்டின் அறிகுறிகளும் அந்தப் பெண்ணிடம் தென்படுகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3ஆவது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியிருக்கிறார்கள். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இஸ்ரேல் கடந்த வாரம் தான் 4ஆவது டோஸூக்கு அனுமதியளித்தது. மூத்த குடிமக்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்தப்படவிருக்கிறது.