பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு... 3 மாணவர்கள் பலி; 3 பேர் கவலைக்கிடம்!
அமெரிக்காவிலுள்ள பள்ளியில் மாணவன் ஒருவர் சரமாரியாக சுட்டதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மிக்சிகன் மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவன் வளாகத்தில் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் டேட் மைர் (16), ஹனா ஜூலியான (14), மடிசின் பால்ட்வின் (17) ஆகியோர் குண்டு துளைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல ஒரு ஆசிரியர், 7 மாணவர்கள் என 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். வென்டிலேட்டரில்தான் சிகிச்சை பெற்று வருகிறனர். தகவலறிந்து உடனே பள்ளிக்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய மாணவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவன் 5 நிமிட இடைவெளியில் 20 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
மாணவன் வைத்திருந்த துப்பாக்கி 9mm கைத்துப்பாக்கி வகை. இது அவரது தந்தையால் நவம்பர் 26ஆம் தேதி வாங்கப்பட்டது. கைது செய்யும் போது அதில் ஏழு தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. என்ன நோக்கத்திற்காக அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதை போலீசார் வெளிப்படையாக சொல்லவில்லை. முழு விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என சொல்லப்பட்டுள்ளது.