குழந்தைகளை குறிவைக்கும் ஒமைக்ரான்... பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!
எந்தவிதமான உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றினாலும் முதலில் அச்சப்படுவது சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தான். ஏனெனில் 12 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்த எந்தவொரு நாடும் அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் 18 வயதுக்கு கீழான யாருக்குமே தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. விஷயம் இவ்வாறு இருக்க தற்போது ஒமைக்ரான் எனும் அதிவேகமாகப் பரவக்கூடிய கொரோனா பெற்றோரை அச்சப்பட வைத்துள்ளது.
அதேபோல ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகிலேயே ஒமைக்ரானால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு தென்னாப்பிரிக்கா தான். அங்கு ஒமைக்ரான் சிறு குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்களை மட்டுமே ஒமைக்ரான் குறிவைத்து தாக்குகிறதா என்பதை அறிய விரிவான ஆய்வுகள் தேவை என கூறுகிறார்கள்.
10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அதிகமாக பரவுகிறது எனவும் மருத்துவமனைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தாத பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் ஒமைக்ரான் பரவுவதால், பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தற்போது தென்னாப்பிரிக்காவில் நான்காம் அலை பரவி வருகிறது. முதல் மூன்று அலைகளில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.