ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு.. ஈபிள் டவரை ஒளிரச் செய்து ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்..
உக்ரைன் மீது ரஷ்யா அதிகாரப்பூர்வமாக தாக்குதலை தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் தன்னை இணைத்து கொள்ள முயன்றது. அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகிவிடுமோ என்பது ரஷ்யாவின் அச்சம்.. அத்துடன் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் ரஷ்யா எண்ணியது. இதனையடுத்து உக்ரைனுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி அதிகாரப்பூவர்மாக தாக்குதலை தொடங்கியது.
அதேநேரம் சிறிய நாடான உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவி வருகின்றன. இதனால் கடும் கோபமடைந்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும், யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று அமெரிக்காவிற்கு சொல்லவே வெகு தைரியமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த உக்ரைன் - ரஷ்யா போரினால் இதுவரை சுமார் 42 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ள நிலையில், 57 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 15 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கிய இந்த ஓராண்டில் இதுவரை டேனேட்ஸ்க், கேர்சன், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20% பரப்பளவை உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்திருக்கிறது. இதனிடையே உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதனை பிரதிபலிக்கும் விதமாக பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடி வண்ணத்தில் பிரதிபலித்தது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்தது.