3 நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. 42 பேர் பலி.. திணறும் வடகொரியா...
வட கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கிய போதும் கூட, கடந்த 2 ஆண்டுகளாக தனது நாட்டில் பாதிப்பு இல்லை என வட கொரியா கூறி வந்தது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது. ஆனால் வடகொரியாவில் வாழும் 25 மில்லியன் மக்களில் யாருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அந்நாடு கூறி வந்தது. சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை வடகொரியா நிராகரித்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது, கடந்த 12 ஆம் தேதி வடகொரொயாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுதான் அந்நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு.
இதனையடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறுவித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். உடனடியாக 1.87 லட்சம் பேர் தனிமை படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட அடுத்த நாளே, அந்த நபர் கொரோனாவுக்கு பலியானார். அதனைத்தொடர்ந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரொனாவுக்கு இரையாகிவருகின்றனர். குறிப்பாக கடந்த 12ம் தேதியில் இருந்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 60 லட்சம் தான் என்கிற் நிலையில் அங்கு யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
அத்துடன் அங்கு போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை. உடனடியாக வெளிநாடுகளிடமிருந்து தடுப்பூசி, மருந்துகள் கிடைக்காவிட்டால் இன்னும் ஏராளமானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் அதிபர் கிம் ஜாங் உன் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். அதேநேரம் வடகொரியாவுக்கு தேவைப்படும் மருந்தை வழங்கம் தயாராக இருப்பதாக சீனாவும், தென்கொரியாவும் தெரிவித்துள்ளன. ஆனால் வடகொரியா தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.