தடுப்பூசிக்கு பயமா?... களமிறங்கும் ஃபைசர் மாத்திரை... 89% வரை பாதுகாப்புக்கு கேரண்டி!
உலகை உலுக்கும் கொரோனா வைரஸின் தன்மை புரியாத புதிராகவே இருக்கிறது. அது எப்படி பரவும், யாருக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதுவுமே தெரியவில்லை. குறிப்பாக அது எந்த விலங்கிலிருந்து மனிதருக்குப் பரவியது என்பதையும் அறியமுடியவில்லை. இதனால் அதற்கு எதிரான நிரந்தர தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் கொரோனாவின் மரபணுவை ஓரளவு புரிந்துகொண்டு, அதற்கேற்ப குறைவான திறனுடன் எதிர்க்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது அவை தான் உலகம் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தடுப்பூசிகள் அதன் தீவிரத்தைக் குறைக்கின்றன. மிக முக்கியமாக உயிரிழப்பை பெருமளவில் குறைக்கிறது. ஆனால் தற்போது வந்திருக்கும் ஒமைக்ரான் கொரோனா 2 டோஸ் போட்டவர்களையும் தாக்குகிறது. இதனால் எதிர்காலத்தில் உருமாறும் வேறு கொரோனா வைரஸ்களையும் கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்தைக் கண்டிபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளனர். தடுப்பூசி மட்டுமில்லாமல் வேறு வழிகளில் உடலுக்குள் செலுத்தும் மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில் மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் கொரோனாவுக்கு எதிராக "பாக்ஸ்லோவிட்" (Paxlovid) என்ற மாத்திரையை ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட 3 நாட்களில் இந்த மாத்திரையை உட்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் குறைந்துவிடுவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 89% வரை கொரோனாவுக்கு எதிராக ஆற்றல் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஃபைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறுகையில், "பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் கொரோனா ஏற்பட்ட பிறகே இந்த மாத்திரை வழங்கப்படும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. தடுப்பூசியை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போன்றது. வருமுன் காப்பதே சிறந்தது.