மெடிக்கல் மிராக்கிள்... பன்றியின் கிட்னியை ஏற்றுக்கொண்ட மனித உடல் - மருத்துவ உலகில் புதிய மைல்கல்!
மனிதர்கள் இன்னொருத்தரை திட்டுவதற்கு பன்றி என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள். இனி அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஏனென்றால் மனிதகுலத்தைக் காப்பதற்காக தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த அந்த கடவுளே பன்றிகள் தான் என நிலைமை மாறப் போகிறது. இதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல; உண்மை தான். இயற்கையாகவே மனிதர்களின் டிஎன்ஏ மரபணுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை குரங்குகள், எலிகள், பன்றிகள் தான். அதனால் தான் எந்தவொரு மருந்தை கண்டுபிடிப்பதற்கும் எலிகள் ஆய்வக பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பன்றிகளும் தான். கடந்த 30 ஆண்டுகளாக பன்றிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்த ஆராய்ச்சி வளர்ந்து இன்று பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இந்தியாவிலோ பன்றியை வராக அவதாரம் எனக்கூறி கடவுளாக்கி வணங்குகிறார்கள். மூடநம்பிக்கைகளில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்க அமெரிக்கர்களோ சத்தமில்லாமல் பன்றியின் உடலுறப்பை மனிதனுக்கு மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள்.
இன்றைய உலகத்தில் மிகவும் சவால் நிறைந்த செயலாக உறுப்பு மாற்று சிகிச்சை பார்க்கப்படுகிறது. உடலுறுப்புகளுக்காக காத்திருந்து காத்திருந்து உயிரிழந்தவர்கள் தான் அதிகம். அந்தளவிற்கு உடலுறுப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடலுறப்புகளைத் தானம் செய்பவர்களும் அரிதாக தான் இருக்கிறார்கள். அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேர் யாராவது உடலுறுப்பு தானம் செய்ய மாட்டார்களா என ஏங்கி கொண்டிருக்கின்றனர். அதில் 90 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் மட்டுமே வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. உடலுறுப்பு கிடைக்காமல் தினந்தோறும் 17 அமெரிக்கர்கள் இறக்கிறார்கள்.
அமெரிக்காவிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியாவில் நிலைமை என்ன என சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கு முடிவுகட்டுவதற்கு தான் மனித உறுப்புகள் டிஎன்ஏவோடு ஒத்துப்போகும் பன்றிகளை ஆராய்ச்சி செய்தார்கள். மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்தவருக்கு மாற்றியுள்ளனர். அவரின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளது. பன்றியின் சிறுநீரகத்தை அவரின் உடல் நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டது ஆராய்ச்சியாளர்களுக்கே சர்ப்ரைஸாக இருந்ததாம். இதன்மூலம் மனித உடலுறுப்புகளுக்கான பற்றாக்குறை நீங்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.