ஓமைக்ரானால் 4வது அலையை எதிர்கொள்கிறோம் - தென் ஆப்ரிக்க அமைச்சர் ஜோ ஃபாஹ்லா தகவல்
கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படும் ஓமைக்ரான், அதற்குள்ளாகவே 29 நாடுகளுக்கும் மேல் கால்பதித்து விட்டது.
இதுவரை இந்த வைரசால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஓமைக்ரான் அச்சத்தால் உலக நாடுகள் தங்களது எல்லைகளை மூடுவது, வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸால் தென் ஆப்பிரிக்கா 4வது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ ஃபாஹ்லா தெரிவித்திருக்கிறார்.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒன்பது மாகாணங்களில், 7 மாகாணங்களில் ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். அதோடு, அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக கூறிய ஜோ, தென் ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தினார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.