இஸ்ரேல் அதிபர் விசிட்.. ஹவுத்தி படைகள் 3ஆம் ஏவுகணை அட்டாக் - அதிரும் அமீரகம்!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஏமனிலுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருகிறது. இதன் வெளிப்பாடாக இரு பிரிவினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுண்டு. அப்படியாக கடந்த 17ஆம் தேதி அமீரக தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள்; ஒருவர் பாகிஸ்தானியர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர் சவுதி மற்றும் அமீரக படையினர்.
ஏமன் தலைநகர் சனாவில் அரபு படையினர் தாக்குதல் நடத்த 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சடா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது சவுதிப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் வரை பலியாகினர். இச்சூழலில் கடந்த 24ஆம் தேதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலை தொடர்ந்தனர். அவர்கள் அமீரகம் மீது இரு ஏவுகணைகளை ஏவியுள்ளனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட அமீரக ராணுவம் பதிலடி தாக்குதல் மூலம் வெற்றிக்கரமாக முறியடித்துவிட்டது. இதனால் பெரும் தாக்குதலும் உயிர் பலியும் தவிர்க்கப்பட்டது.
மேலும் அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இருப்பினும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. மூன்றாவது முறையாக மீண்டும் ஏவுகணை தாக்குதலை தொடுத்துள்ளனர். வழக்கம் போல இம்முறையும் ஏவுகணையை பதிலடி கொடுத்து அமீரக ராணுவம் அழித்துவிட்டது. மக்கள் வசிக்காத பகுதியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததாகவும் இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் அதிபராக இருப்பவர் மன்சூர் ஹைதி. இவர் இஸ்லாமிய மதத்தில் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் உள்நாட்டில் இருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஷியா பிரிவை முன்னெடுப்பவர்கள். இந்த இரு பிரிவுகளுக்கான சண்டை மோதல் உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது. 2015ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சுன்னி பிரிவை ஆதரிக்கும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை செயல்படுகின்றன. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் படைக்கு ஷியா பிரிவை ஆதரிக்கும் ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதுவே மோதலுக்கு காரணம்.