பிரிட்டனில் முதன்முறையாக... 1 லட்சம் பேருக்கு கொரோனா - கதிகலங்கும் அரசு!
ஒமைக்ரான் கொரோனா முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது அங்கு பரவல் குறைந்துவிட்டது. ஆனால் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவி வருகிறது. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் நாள்தோறும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்படுகிறது. அங்கே டெல்டாவும் ஒமைக்ரானும் ஒருசேர தாக்குகின்றன. குறிப்பாக 2 டோஸ் போட்டவர்களை குறிவைத்து பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஒமைக்ரான் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறிவிட்டது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டுமில்லாமல், எங்கும் செல்லாத பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், கடல் அலையைப் போல ஒமைக்ரான் கொரோனா அலை ஆர்ப்பரித்து வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். பிரிட்டனில் மீண்டும் ஒரு அலை வருவதற்கான அத்துனை சாத்தியக்கூறுகளும் தெரிகிறது.
கடந்த வாரம் தினசரி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் கடந்த சில நாட்களாகவே 80 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இச்சூழலில் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. பிரிட்டனில் முதன்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட போவதில்லை என பிரதமர் கூறியிருக்கிறார். அது முடிந்ததும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.