ஒரே நாளில் 5 லட்சம் கொரோனா கேஸ்... வாடி நிற்கும் வல்லரசு நாடு - 2022 வருசமும் போச்சா!
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. அபாயகரமான டெல்டாவை விட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது ஒமைக்ரான். வேகமாகப் பரவினாலும் லேசான பாதிப்பை தான் ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் டெல்டாவுடன் சேர்ந்து இதுவும் சேர்ந்து பரவுவதால் ஆபத்தானதாக மாறாலாம் என சொல்லப்படுகிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தான் டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தாக்குகின்றன.
பிரிட்டனில் தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் சென்றுவிட்டது. அதில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அதேபோல அமெரிக்காவின் நிலை தான் மிக மோசமாக மாறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்டாவை ஓரங்கட்டி ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவுகிறது.
டிசம்பர் 25ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களில் 58.6 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு தான் இருந்துள்ளது. அதேபோல 41.1 சதவீதம் பேருக்கு டெல்டா கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர டெல்டா, ஒமைக்ரான் ஆகிய மாறுபாடுகளின் இரு குணங்களையும் இணைத்து 'டெல்மைக்ரான்' என்ற புதிய உருமாறிய வைரஸ் பரவுவதாகவும் சொல்லப்படுகிறது. 2022ஆம் ஆண்டை இது தான் ரூல் செய்யப் போகிறது என்கிறார்கள். அதேபோல முன்பை விட தற்போது தான் சிறுவர்கள் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 52.9 மில்லியன், 5 கோடியே 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் டெல்டா பரவலைக் கட்ட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்வுகள், பயணக் கட்டுப்பாடு என மினி லாக்டவுனை கொண்டுவந்திருக்கின்றன. பரவல் மேலும் அதிகரித்தால் முழு லாக்டவுன் வருவதற்கான அத்துனை சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.